Monday, September 11, 2017

கடைசி நண்பன் (The Last Friend - Tahar Ben Jelloun)


இது ஒரு புதிய கதையல்ல. இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் கதை. இது மொராக்கோவில் உள்ள Tangiers நகரில் நடக்கிறது.  மம்மது மற்றும் அலி இருவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் .பதின் வயதிற்குரிய அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள். பெண்கள்தான் அவர்களின் பெரும் கவனம். இருவருக்கும் அதில் ஒரு போட்டி.

மம்மது ஒரு கோபக்காரன்.போலித்தனமான சமுதாயத்தை சாடுகிறான். மேல்படிப்பிறகு பிரான்ஸ் செல்கிறான் அங்கு பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றுகிறான். மருத்துவம் படிக்கிறான்.  அலி  அமைதியானவன் சற்று வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன். சினிமாவில் ஈடுபாடுள்ளவன். ஆசிரியர் பணியில் சேருகிறான். இருவரும் மொராக்கோ அரசால் கைது செய்யப்பட்டு ஒரே சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பதினெட்டு மாதங்கள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொள்கிறார்கள்.
இருவருக்கும் திருமணம் நடக்கிறது இருவரின் மனைவிமார்கள் அவர்களின் நட்பை எதிர்கிறார்கள். திடிரென்று ஒரு நாள்  மம்மது அலி மீது பெரும் கோபம்கொண்டு அவனை திட்டுகிறான் அவர்களின் நட்பை கொச்சைப் படுத்துகிறான். ஏன் இந்த கோபம் -அது மற்றொரு  கதை.

மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் கதை நடக்கும் இடமான  Tangiers . கதை முழுவதும் அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.  மம்மது ஸ்வீடன் சென்ற பிறகு Tangiers-ஐ  நினைத்து ஏங்குகிறான்.  ஸ்வீடன் ஒரு அமைதியான நாடென்றும் அவன் அமைதியில்லாத  Tangiers-ஐ  விரும்புவதாக கூறுகிறான்.  அது அலி மீது பொறாமையாக மாறுகிறது. ஏனென்றால் அலி அங்கேயே இருக்கிறான்.

கதை மூன்று நபர்களால் சொல்லப்படுகிறது. முதலில் அலி அவர்களின் நட்பை மற்றும் அவர்களின் பிரிவை தனது நோக்கில் சொல்கிறான். அலி முடித்தவுடன்  மம்மது அவனது பார்வையில் அவர்களின் நட்பையும் அவனது கோபத்திற்கான காரணத்தையும் சொல்கிறான்.அவன் அலியின் கதையை மறுக்கவில்லை மாறாக அதற்கு மேலும் வலு  சேர்கிறான்.  இறுதியாக இவர்கள் இருவரின் நண்பன் அவனது நோக்கில் அவர்களின் நட்பை சொல்கிறான். இந்த கதைக்கு இந்த கதைசொல்லும் முறை மிக சரியாக பொருந்துகிறது.

இஸ்லாமிய நாட்டில் நடக்கும் கதையாதலால் பாரம்பரிய வகையில் எந்த விசயத்தையும் குறிப்பாக பாலியல் சம்பந்தமுடையவற்றை மறைத்து ஆசிரியர் கூறிருப்பார் என்று நினைப்பவர்களுக்கு பெரும் ஏமாற்றமே.  அனைத்தையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இளம்பெண்களின் பாலியல் குறித்த செயல்பாடுகளும் எண்ணங்களும் ஆசிரியரால் மிகவும் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது . மொராக்கோவின் கலாச்சாரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர்.  எளிய எழுத்து நடை. தஹர்  பென் ஜெல்லோன் உலக புகழ் பெற்ற  மொராக்கோ எழுத்தாளர் பல விருதுகளை பெற்றவர்.  இவருடைய "The Blinding Absence of Light" என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். அந்த புத்தகத்தை வாங்க சென்று அதில்லாமல் இப்புத்தகத்தை வாங்கினேன். 

வாசிக்கலாம்.

     

1 comment:

avanevan said...

Thanks please
Good Luck
Regards
Kasturi G